ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 90 வயதான முன்னாள் மாவட்ட நீதிபதி கணபத் சிங் பண்டாரி, வாட்ஸ்அப் வழி வந்த இணையவழி மோசடியால் ரூ.2.50 கோடியை இழந்துள்ளார்.
கடந்த ஜூலை 28 அன்று இவரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சீருடையில் தன்னை மும்பை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். ரூ.50 கோடி மதிப்பிலான ஹவாலா பணப் பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாகவும், அவரது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் ரூ.40 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, கைது செய்யாமல் இருக்க பணத்தைக் கோரி மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு நபர் தன்னை ரிசர்வ் வங்கி மேலாளர் எனக் கூறி தொடர்பு கொண்டு, நீதிபதியின் பரஸ்பர நிதி முதலீடுகள் மற்றும் இதர நிதி ஆவணங்களின் விவரங்களைப் பெற்றுள்ளார். கடுமையான பயம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளான நீதிபதி, ஆகஸ்ட் 3 முதல் 10 ஆம் தேதிக்குள் சுமார் ரூ.2,50,51,000 நிதியை மோசடி நபர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். சுமார் 15 நாட்கள் இவரை ‘டிஜிட்டல் காவலில்’ வைத்திருந்த மோசடி கும்பல், ஒவ்வொரு உரையாடலுக்குப் பிறகும் வாட்ஸ்அப் தகவல்களை அழிக்குமாறு வற்புறுத்தியுள்ளது.
பின்னர் தனது ஓய்வூதியக் கணக்கிலிருந்தும் பணத்தை மாற்றுவதற்காக நீதிபதி ஜோஹரி பஜாரில் உள்ள எஸ்பிஐ கிளையை அணுகியபோது, சந்தேகமடைந்த வங்கி மேலாளர் பணப் பரிவர்த்தனையை உடனடியாக நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் இந்த இணையவழி மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து முன்னாள் நீதிபதியின் மருமகன் அளித்த புகாரின் பேரில் ஜெய்ப்பூரில் உள்ள ஜோதி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.











