இந்தியக் கலைத்துறைக்கு அரிய பங்களிப்புகளை வழங்கிய சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருது வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மிக விமரிசையாக நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 115 கலைஞர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த விழாவில், தமிழ் திரையுலகில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது முத்திரையைப் பதித்த மூத்த நடிகர் வாகை சந்திரசேகருக்கு, நாடகம் மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய ஒட்டுமொத்தப் பங்களிப்பைப் பாராட்டிச் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது.
1980களில் திரைத் துறையில் அறிமுகமான இவர், 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் அன்பைப் பெற்றவர்.
முன்னதாக 1991ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதையும், 2002ஆம் ஆண்டு ‘நண்பா நண்பா’ திரைப்படத்திற்காகச் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையும் வென்ற இவர், தற்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
விருதைப் பெற்றுக்கொண்ட பின்னர் நெகிழ்ச்சியுடன் உரையாற்றிய வாகை சந்திரசேகர், தமக்குக் கிடைத்துள்ள இந்த உயரிய தேசிய விருதை, தமிழ்நாட்டில் கலைச்சேவையாற்றி வரும் அனைத்து நாடகக் கலைஞர்களுக்கும் முழு மனதுடன் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.











