அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான மோதலைத் தொடர்ந்து ஈரான் மீது முன் எப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில் இது குறித்து விவரித்துள்ள அவர், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை நடவடிக்கைகள் முடக்கப்பட்டு, நாட்டின் ராணுவத் தொழிற்சாலைகள் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளத் தவறிவிட்டதால், அந்நாட்டின் மீதான அச்சுறுத்தல்களை முற்றிலும் முறியடிக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானுக்கு வர்த்தகம், நிதிப் பரிமாற்றம், எண்ணெய் கடத்தல் அல்லது கப்பல் போக்குவரத்து சேவைகள் மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் எந்தவொரு நாட்டின் மீதும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படுத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஈரானை உலகளவிலான பொருளாதார அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளமை , சர்வதேச வணிக மற்றும் நிதிச் சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.











