மொன்றியல் (Montreal) நகரின் யூத வழிபாட்டுத் தலம் மீது கடந்த 2024-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொலிஸாரின் குற்றப்பத்திரிகை மற்றும் நீதிமன்ற விசாரணையின் மூலம் இந்தத் திட்டமிட்ட சதி குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொன்றியலின் கான்கிரிகேஷன் பெத் திக்வா (Congregation Beth Tikvah) யூத வழிபாட்டுத் தலம் மற்றும் அதன் அருகே உள்ள யூத சமூக மையக் கட்டிடத்தின் மீது, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அன்று நள்ளிரவில் தீவைப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய முகமது இல்யேஸ் அகோடாட் என்ற இளைஞருக்கான தண்டனை விபரங்கள் குறித்த விசாரணை மொன்றியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி கரின் கிகுவேர் (Karine Giguère) முன்னிலையில் சாட்சியமளித்த முகமது இல்யேஸ் அகோடாட், தான் ஒரு கேளிக்கைக் கொண்டாட்டத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் 15,000 கனேடிய டொலர் பணத்திற்கு இந்த “பணி” தனக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
தனக்கு யூத சமூகத்திற்கு எதிரான எந்தவொரு மதவெறுப்பும் (Antisemitism) கிடையாது என்றும், போதைப்பொருள் பழக்கத்திற்குப் பணம் தேவைப்பட்டதாலேயே இதைச் செய்ததாகவும் முகமது இல்யேஸ் அகோடாட், தெரிவித்துள்ளார். வழிபாட்டுத் தலத்திற்குத் தீ வைத்த பிறகு, அருகில் உள்ள யூத சமூக மையக் கட்டிடத்திற்கும் தீ வைக்க முயன்றபோது, தான் பயந்து நடுங்கிவிட்டதாக அகோடாட் கூறியுள்ளார். இதனால் சதிகாரர்களால் அவருக்கு அளிக்கப்பட்ட முழு வேலையையும் முடிக்கப்படவில்லை.
இதனையடுத்து இந்தப் பணியை இவருக்கு செய்வதற்காக அளித்த சதிகாரர்கள் அகோடாட்டைத் தொடர்புகொள்வதை நிறுத்தியுள்ளனர். இந்தத் தீவைப்புச் சம்பவத்தால் கட்டிடத்திற்குச் சிறிய அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்ட போதிலும், உள்ளூர் யூத மக்கள் மத்தியில் இது ஆழமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறிய அகோடாட், சிறைவாசத்திற்குப் பிறகு தாம் நேரில் சென்று யூத மக்களிடம் மன்னிப்பு கோர விரும்புவதாகக் என்று கூறியுள்ளார்.
அகோடாட் தரப்பு சட்டத்தரணிகள் 4 மாத வீட்டுச் சிறை மற்றும் 7,000 டொலர் இழப்பீடு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கூடிய தற்காலிக தண்டனையை அவருக்கு வழங்குமாறு பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவருக்கு 24 மாத கால நேரடிச் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என உறுதியாகக் கோரியுள்ளனர். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை நீதிபதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10-ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











