ஹோட்டல் ஒன்றில் சுத்திகரிப்பு கடமையில் ஈடுபட்டு வந்த 21 வயது பெண் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 50 வயதுடைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (09) பிற்பகல் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
குறித்த நகரசபை உறுப்பினரின் ஹோட்டல் ஒன்றின் சுத்திகரிப்பு வேலைக்கு வெற்றிடம் இருந்து வந்துள்ள நிலையில் திருமணம் முடித்து கணவனை பிரிந்து வாழும் ஒரு குழந்தைக்கு தாயான 21 வயது பெண்ணின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு குறித்த வேலையை 40 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு அமர்த்தப்பட்டு அவர் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு ஹோட்டல் உரிமையாளரான நகரசபை உறுப்பினர் ஒழுங்காக சம்பளம் வழங்காததையடுத்து குறித்த பெண் பணிக்கு செல்லாது இருந்து வந்துள்ளதாகவும் வழங்கப்படாத சம்பளத்தை தருவதாகவும் வேலைக்கு வருமாறு நகரசபை உறுப்பினர் தொலைபேசி ஊடாக பெண்ணை அழைத்துள்ளார்.
இதன் பிரகாரம் சம்பவ தினமான நேற்று வியாழக்கிழமை காலையில் குறித்த ஹோட்டலுக்கு சென்ற பெண் அங்குள்ள அறைகளை துப்பரவு செய்யும் போது அதன் கதவுகளை பூட்டி விட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நகரசபை உறுப்பினர் குறித்த அறையின் கதவின் வேறு ஒரு திறப்பை பயன்படுத்தி கொண்டு கதவை திறந்து உள்நுழைந்து கொண்டு தனது கையை பிடித்து நெஞ்சு பகுதியை பிடித்ததாகவும் அதனை உதறி தள்ளி கொண்டு அறையில் இருந்து வெளியே வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நகரசபை உறுப்பினரை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்த வரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (10) ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.











