மொண்ட்ரியல் நகரிலுள்ள புகழ்பெற்ற ‘லா பொன்டைன்’ (La Fontaine Park) பூங்காவில், யூத குடும்பம் ஒன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெறுக்கத்தக்க யூத எதிர்ப்பு (Antisemitism) அச்சுறுத்தல் மற்றும் வாய்மொழித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொண்ட்ரியல் காவல்துறையினர் (SPVM) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மொண்ட்ரியல் காவல்துறையின் வெறுப்புக் குற்றப் பிரிவு (Hate Crimes Unit) நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றது.
இதில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட யூத குடும்பத்தினர் ‘லா பொன்டைன்’ பூங்காவில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த நபர் ஒருவர் அவர்களை இலக்கு வைத்து கடுமையான யூத எதிர்ப்பு வார்த்தைகளினாலும் இனவெறி வாசகங்களினாலும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த அக்குடும்பத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்ததுடன், பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கேமரா (CCTV) ஒளிப்பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு நாட்டிலுள்ள யூத சமூக அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.











