கியூபெக் மாகாணத்தில் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் மற்றும் நாய்களுக்குத் தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்துமாறும், தடுப்பூசி நிலையை உடனுக்குடன் புதுப்பிக்குமாறும் கியூபெக் வேளாண்மை, மீன்பிடி மற்றும் உணவு அமைச்சு (MAPAQ) செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் முதன்முறையாகத் தெருப்பூனை ஒன்றிற்கு ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கியூபெக்கின் மொன்டிரேஜி (Montérégie) பிராந்தியத்தில் உள்ள காட்மேன்செஸ்டர் (Godmanchester) பகுதியில் அலைந்து திரிந்த தெருப்பூனை ஒன்றிலேயே இந்த ஆபத்தான வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்தே, கியூபெக் வேளாண்மை, மீன்பிடி மற்றும் உணவு அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காட்டுவிலங்குகளில் பரவிவரும் இந்த வெறிநோய் தொற்று, தற்போது வீட்டுச் செல்லப்பிராணிகளுக்கும் பரவக்கூடிய அபாயத்தை இந்நிகழ்வு தெளிவாகக் காட்டுகிறது என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.










