தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் இன்று (7) காலை 10 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளின் உரிமையாளர்களும், கிராம மக்களும் கலந்துக் கொண்டனர்.
மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டதோடு வடக்கின் சில பகுதிகளில் இருந்தும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.











