டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஹைதராபாத் செல்லவிருந்த பயணி ஒருவரின் கைப்பையிலிருந்து குரங்கின் மண்டை ஓடு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) அதிகாரிகள் வழக்கமான பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய நபரின் உடைமைகளைச் பரிசோதித்தனர். அப்போது, அவரது கைப்பையில் குரங்கின் மண்டை ஓடு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பயணியைப் பிடித்த பாதுகாப்புப் படையினர், மேலதிக விசாரணைக்காக அவரை உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மண்டை ஓடு அறிவியல் பூர்வமான பரிசோதனைக்காகப் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு தொடர்பான விவகாரம் என்பதால், 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பயணி மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தப் பயணிக்கு இந்தக் குரங்கு மண்டை ஓடு எங்கிருந்து கிடைத்தது, அதனை டெல்லியிலிருந்து ஹைதராபாத்திற்கு எதற்காகக் கொண்டு செல்ல முயன்றார் என்ற நோக்கத்தைக் கண்டறியக் காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.











