கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் பகுதியில் உள்ள ஹாரிங்டன் நகராட்சியை தாக்கிய கடுமையான புயல் உண்மையில் ஒரு சூறாவளியா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் வானிலை ஆய்வாளர் டொமினிக் மார்டெல் தெரிவித்ததாவது, ரேடார் தரவுகளின்படி அந்த சுழற்காற்று மாலை 5.34 மணியளவில் உருவாகி, 5.44 மணியளவில் முடிவடைந்துள்ளது.
இந்த புயல் சுமார் 10 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தையடுத்து அப்பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், சில சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது உண்மையில் தரையைத் தொட்ட சூறாவளியா அல்லது கடுமையான சுழற்சி கொண்ட புயலா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் தற்போது சேதமடைந்த பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆய்வுகள் நிறைவடைந்த பின்னரே, ஹாரிங்டனை தாக்கிய இந்த வானிலை நிகழ்வு அதிகாரப்பூர்வமாக சூறாவளி என அறிவிக்கப்படுமா என்பது தெளிவாகும். இதற்கிடையில், அப்பகுதி மக்களுக்கு வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.











