சுரங்கங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் / எரிவாயுக் குழாய்த்திட்டங்கள் உள்ளிட்ட பெரு அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் வள அபிவிருத்தித் திட்டங்களுக்கான சுற்றாடல் மதிப்பீட்டுச் செயல்முறையை (Environmental Assessment) எளிமையாக்கவும் விரைவுபடுத்தவும் கியூபெக் மாகாண அரசாங்கமும் நாட்டின் மத்திய அரசாங்கமும் கொள்கையளவில் உடன்பாடு கண்டுள்ளன.
மொன்றியலில் இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கியூபெக் மாகாண சூழல் அமைச்சர் பாஸ்கல் டெரி (Pascale Déry) மற்றும் மத்திய அரசுத் திணைக்களங்களின் மறுசீரமைப்பு மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் ஜோயல் லைட்பவுண்ட் (Joël Lightbound) ஆகியோர், இணைந்து இப்புதிய ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
இப் புதிய உடன்படிக்கையின்படி, கியூபெக் மாகாண அதிகார வரம்பிற்குள் அமையும் பெருந்திட்டங்கள், மாகாண அரசாங்கத்தின் சூழல் மதிப்பீட்டுக்கு மட்டுமே உட்படுத்தப்படும்.
இதன்மூலம் மத்திய அரசு மற்றும் மாகாண அரசு என இருவேறாக மேற்கொள்ளப்பட்டு வந்த இரட்டைச் சூழல் மதிப்பீட்டு நடைமுறைகள் தவிர்க்கப்பட்டு, திட்டங்களை விரைவாகத் தொடங்க வழிவகுக்கப்படும்.
சூழல் மதிப்பீட்டுச் செயல்முறை விரைவுபடுத்தப்பட்டாலும், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான உயர் தரநிலைகளில் எந்தவொரு விட்டுக் கொடுப்பும் செய்யப்பட மாட்டாது என்று, கியூபெக் சூழல் அமைச்சர் பாஸ்கல் டெரி சுட்டிக்காட்டியுள்ளார்.











