மன்னார் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும், இதனால் மின் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடிக்கடி மின் தடை காரணமாக எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக சீரான மின் விநியோகம் இடம் பெற்று வந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக இரவு பகல் பாராது மின்தடை ஏற்பட்டு வருகிறது.
திடீர் திடீர் என இரவு பகல் பாராது மின்தடை ஏற்படுவதால் மின் பாவனையாளர் களின் மின் உபகரணங்கள் சேதமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த காலங்களில் பரீட்சை காலம் நெருங்கு கின்ற போது மன்னாரில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை போன்று தற்போது புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சை நெருங்கும் காலப்பகுதியில் குறித்த மின்தடை இடம் பெற்று வருவதாக மின் பாவனை யாளர்களும், மாணவர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த மின் தடை தொடர்பாக மன்னார் மின்சார சபை அதிகாரிகள் மற்றும் வடக்கிற்கு பொறுப்பான மின்சார சபை அதிகாரிகள் உரிய பதிலை வழங்குவதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த உரிய அதிகாரிகள் குறித்த விடையத்தில் கவனம் செலுத்தி அடிக்கடி ஏற்படும் மின் தடையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.











