பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ (NATO) ராணுவத் தலைமையகத்தில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கனடியப் பெண் தொடர்பான விசாரணையில், கனடிய அதிகாரிகள் ஆரம்பத்திலிருந்தே தீவிரமாகப் பங்காற்றி வருவதாக, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக முதன்முறையாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, “இது ஒரு தொடர் விசாரணை என்பதால் தம்மால் விரிவாகப் பேச முடியாது என்றபோதும் கனடிய அதிகாரிகள் இந்த விசாரணையின் ஆரம்பத்திலிருந்தே இதில் ஈடுபட்டுள்ளனர் என்பதை மட்டும் மறைமுகமாகக் குறிப்பிட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
பெல்ஜியத்தின் மோன்ஸ் (Mons) நகரில் அமைந்துள்ள நேட்டோவின் ஐரோப்பிய கூட்டுப் படைகளின் உயர்மட்டத் தலைமையகத்தில் (SHAPE) பயிற்சியாளராக (intern) பணியாற்றிய கனடியப் பெண் ஒருவர், சட்டவிரோதமாக உளவு பார்த்தல் மற்றும் குற்றவியல் அமைப்பில் பங்கேற்றல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெல்ஜிய அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
பெல்ஜிய சட்ட நடைமுறைகளின்படி கைது செய்யப்பட்டவரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும், அவர் “சீன வம்சாவளியைக் கொண்ட கனடியப் பிரஜை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











