மொண்ட்ரியல் நகரில் உள்ள குடியிருப்பு வீடொன்றில், தனது சொந்தப் பெற்றோரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கத்திக் குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபத் தம்பதியினர், தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாகக் காவல் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் மொண்ட்ரியலின் செயிண்ட்-லியோனார்ட் (Saint-Léonard) பகுதியில் அமைந்த வீயொ (Viau) வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதைக் கண்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், சம்பவ இடத்திற்கு அருகிலேயே பாதிக்கப்பட்ட தம்பதியினரின் 26 வயது மகனைக் கைது செய்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக இத்தாக்குதல் இடம்பெற்றதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து மொண்ட்ரியலின் பொலிஸ் புலனாய்வாளர்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.











