எமது sea of Sri Lanka கடற்பரப்பினுள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்திய மீனவர் ஒருவர் இறந்த துன்பியல் சம்பவமானது மன வேதனை அளிக்கிறது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு. எமது நாட்டு கடற்படைகள் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ளும் பொழுது இந்த துன்பியல் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற கடற்ப்படையின் கலங்கள் வெளிச்சம் பாய்ச்சி செல்வது இல்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ராடார் முறையிலும் ஜி.பி.எஸ் கருவியின் உதவியுடனும் அவர்கள் நடமாடிக் கொண்டிருப்பார்கள். எதிரே வருகின்ற படகுகளின் வெளிச்சங்கள் அல்லது சமிச்சைகள் தெரியக்கூடியவாறு இருந்தால் கடற்படையினர் வெளிச்சத்தை காட்டி விலத்தி செல்வது வழக்கம்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்திய இழுவை படகு எமது கடற்பரப்பின் நுழைந்து மீன்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை கடற்படையின் படகும், மீனவர்களின் படகும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதில் ஒரு மரணம் உறுதியாகி உள்ளதுடன் இன்னொருவரை காணவில்லை. இருவர் காப்பாற்றப்பட்டு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
தொடர்ச்சியாக இந்திய இழுவை படகுகள் எமது எல்லையை தாண்டி வந்து எமது கடற்பரப்பினுள் தொழில் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையிலே அவர்களும் கூடுதலான நேரங்களில் வெளிச்சம் பாய்ச்சாமலேயே தொழில் செய்கின்றார்கள். கரையை அண்மித்த பகுதியில் தொழில் செய்யும் பொழுது வெளிச்சம் பாய்ச்சாமல் தொழில் செய்வது அவர்களுடைய எழுபது வீதத்திற்கு மேற்பட்ட நடவடிக்கையாக இருக்கின்றது.
எமது sea of Sri Lanka எனப்படுகின்ற கடற்பரப்பினுள் நீங்கள் அத்துமீறி நுழைவது தவிர்க்க முடியாத விடயம் என உங்களுடைய மீனவ சங்கத் தலைவர் கூறியிருந்தாலும் தொழிலுக்கு வருகின்ற நீங்கள், இந்த நாட்டிலேயும் கண்காணிப்புகள் கடற்படைகள் இருக்கும் என்ற கருத்தை உங்கள் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும் .
இனிவரும் காலங்களிலாவது எல்லை தாண்டி வந்து தொழில் செய்வதை நிறுத்த வேண்டும். நீங்கள் திருட்டுத்தனமாக உள்நுழைக்கின்ற போது குறுக்கே மறுக்கே ஓடுகின்ற கடற்படையின் படகுகள் மூலம் சேதங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்றார்.











