கியூபெக் நகருக்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கியூபெக் நகருக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயிண்ட்-அகஸ்டின்-டி-டெஸ்மௌரெஸ் (Saint-Augustin-de-Desmaures) நகரசபையின் ழான்-ஜூனோ வீதியில் (Jean-Juneau Street) அமைந்திருந்ததும், 42 அலகுகளைக் கொண்டதுமான குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறிப்பிட்ட குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து கடுமையான புகையும் தீப்பிழம்புகளும் வெளியேறுவதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவசர உதவி இலக்கத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீப்பிடித்து எரிந்த வீட்டின் உள்ளே மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதலின் போது, சுயநினைவை இழந்த நிலையில் பெண் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.
மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கியூபெக் நகரின் தீயணைப்புத் துறைச் செய்தித் தொடர்பாளர் அலெக்சாண்டர் லாஜோய் (Alexandre Lajoie) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தீ விபத்தில் வேறு எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்களின் விரைவான செயல்பாட்டினால் தீ அடுத்தடுத்த வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்ட போதிலும், தீ விபத்து நிகழ்ந்த இரண்டாம் தளத்து வீடு மற்றும் அதற்கு நேர் கீழே அமைந்துள்ள முதலாவது தளத்து வீடு ஆகிய இரண்டும் கடுமையான புகையினாலும் தீயினாலும் சேதமடைந்துள்ளன.
இதனால், அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் மீண்டும் அங்கு தங்குவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.











