சர்வதேச மாணவர்கள் இன்று மொன்றியல் நகரில் வீதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன், கியூபெக் குடியகல்வு அமைச்சகத்தின்
அலுவலகம் நோக்கிப் பேரணியாகவும் சென்றனர்.
கியூபெக் மாகாணத்தில் செயற்பட்டு வந்த நான்கு முன்னணி தனியார் கல்லூரிகளின் இயக்க அனுமதிப்பத்திரங்களை (Permits) மாகாண அரசு
திடீரென ரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொன்றியலில் அமைந்துள்ள ‘கொலேஜ் சுப்பீரியர் டி மொன்றியல்’ (Collège supérieur de Montréal), ‘கொலேஜ் சுப்பீரியர் டி ஷெர்புரூக்’ (Collège supérieur de Sherbrooke), ‘கொலேஜ் ஹெர்சிங்’ (Collège Herzing) மற்றும் ‘கொலேஜ் டி டெக்னாலஜி வெரிடாஸ்’ (Collège de technologie Veritas) ஆகிய நான்கு அரசு மானியம் பெறும் தனியார் கல்லூரிகளின் அனுமதிகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், படிப்பை முடிக்கும் தறுவாயில் இருந்த சர்வதேச மாணவர்கள் பலரது எதிர்காலமும், நாட்டில் தங்கியிருப்பதற்கான விசா நிலையும்
இதனால் கேள்விக்குறியாகியுள்ளது. படிப்பை நிறைவு செய்ய சில வாரங்களே எஞ்சியிருந்த நிலையிலும், இறுதிப் பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்திலும் இந்தத் திடீர் முடிவு கியூபெக் அரசால் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மாணவர்கள் வேதனை
தெரிவித்துள்ளனர்.
மாற்று வழியில் தங்கள் படிப்பை முடித்துக் கொள்வதற்கு உடனடியாக வழிவகை செய்யுமாறு, சர்வதேச மாணவர்கள் கியூபெக் அரசை தற்போது கோரியுள்ளனர்.
நாட்டின் கல்வி விசா விதிகளின்படி, மாணவர் ஒருவர் தங்கியிருப்பதற்கு அவர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முழுநேரக் கல்வி பயில்வது அவசியமாகும்.
தற்போது கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், தமக்கு வேறு கல்லூரிகளில் உடனடியாகச் சேர்க்கை வழங்கி, குடியகல்வு அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க, கியூபெக் அரசு உதவ வேண்டும் என சர்வதேச மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, தனியார் கல்விச் சட்டங்களின்படி அமைக்கப்பட்ட நிபந்தனைகளை இக் கல்லூரிகள் சரியாகப் பூர்த்தி செய்யத் தவறியமையினாலேயே அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என கியூபெக் கல்வி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பிரையன் செயிண்ட்- லூயிஸ் (Bryan St-Louis) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட வேறு கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிப்பைத் தொடர நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கான கல்விக்கட்டண விலக்குகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் அமைச்சு உறுதியளித்துள்ளது.











