கனடாவில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ புகை காரணமாக மொன்றியல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு காற்றுத் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, இன்று பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என தெரிவித்துள்ளது.
காட்டுத்தீ புகை அதிகரிக்கும் போது, மக்களின் உடல்நல ஆபத்துகளும் அதிகரிக்கும் என்பதால், வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளை ஒத்திவைக்கவோ அல்லது மறுசீரமைக்கவோ பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த புகை காரணமாக கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், தலைவலி, இருமல் போன்ற லேசான அறிகுறிகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிலருக்கு மூச்சுத்திணறல், மார்பு வலி மற்றும் கடுமையான இருமல் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளும் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகள் கொண்டவர்கள் மற்றும் வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை முடிந்தவரை மூடியே வைத்திருக்கவும், காற்று சுத்திகரிப்பு வடிகட்டிகளை பயன்படுத்தவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா முதல் நோவா ஸ்கோஷியா வரை கனடா முழுவதும் 950-க்கும் அதிகமான காட்டுத்தீகள் எரிந்து கொண்டிருப்பதாகவும், இதனால் நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தர எச்சரிக்கைகள் அமலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











