கியூபெக் உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், பிரதிநிதிகள் இன்றி வெறுமையாக உள்ள மூன்று மத்திய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்ட்னி (Mark Carney) இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சியின் பெரும்பான்மை பலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மிகவும் தீர்க்கமானதாகப் பார்க்கப்படுகின்றன.
கியூபெக் மாகாணத்தின் ’ஷிகூட்டிமி—லே ஃபோர்ட் (Chicoutimi—Le Fjord)’ தொகுதி, ஒன்ராறியோ மாகாணத்தின் பீச்சஸ்—ஈஸ்ட் யார்க் (Beaches—East York) தொகுதி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் நோர்த் வென்கூவர்—கப்பிலனோ (North Vancouver—Capilano) தொகுதி முதலான மூன்று தொகுதிகளுக்கே, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சி தனது கட்டுப்பாட்டைத் தொடர்வதற்கு, இந்த மூன்று தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சபாநாயகர் பிரான்சிஸ் ஸ்கார்பலெஜியா (Francis Scarpaleggia) தவிர்ந்து, தற்போதைய நிலவரப்படி லிபரல் கட்சி நாடாளுமன்றத்தில் 171 இடங்களைக் கொண்டுள்ளது.
இருப்பினும், முன்னாள் அமைச்சர் ஸ்டீவன் கில்போல்ட் (Steven Guilbeault) ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதால், நாடாளுமன்றக் கோடைக்கால விடுமுறை முடிந்து உறுப்பினர்கள் செப்டம்பரில் மீண்டும் கூடும்போது லிபரல் கட்சியின் பலம் 170 ஆகக் குறையும் நிலை காணப்படுகின்றது.
எனவே, இந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தையாவது கைப்பற்றினால் மட்டுமே லிபரல் கட்சி 171 இடங்களை எட்டி, சட்டமூலம் நிறைவேற்றுவதற்கான வாக்களிப்புகளில் சமநிலை ஏற்படும் சந்தர்ப்பங்களில் சபாநாயகரின் வாக்களிப்புடன் லிபரல் கட்சி அரசு தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.











