மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி மீன்பிடி துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் இன்று (1) சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி மீன்பிடி துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி மீன் பிடிக்க கண்ணாடியிழை படகில் சென்ற இரு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான வலையை கடலில் பாய்ச்சி விட்டு கரைக்கு திரும்பிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது.
இதன் போது குறித்த படகில் எரிபொருள் முடிந்ததன் காரணமாக எரி பொருளை எடுத்து வரலாம் என்னும் நோக்கில் குறித்த மீனவர் கடலில் குதித்து நீந்தி கரை சேருவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் பலத்த காற்றின் காரணமாக அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் 30 ஆம் திகதி வியாழன் மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த சந்தர்ப்பத்தில் காட்ட ஆஸ்பத்திரி பகுதியில் இருந்து தொழிலுக்குச் சென்ற சக மீனவர்கள் கடலில் தத்தளித்து நின்றதாக கூறப்படுகின்ற குறித்த படகையும் மீனவரையும் மீட்டு கரைக்கு வந்துள்ளனர்.
மேலும் எரி பொருளை பெற்றுக் கொண்டு வருவதாக கூறி கடலில் நீந்திச் சென்ற நிலையில் காணாமல் போன சக மீனவரையும் தேடியுள்ளனர்.
காணாமல் போன மீனவர் தொடர்பாக எவ்வித தகவலும் தெரியாத நிலையில் எருக்கலம் பிட்டி மீனவர்கள் இன்று சனிக்கிழமை (1) காலை கடலில் சடலம் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து காட்டாஸ்பத்திரி மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குறித்த தகவல்களுக்கு அமைவாக காட்டாஸ்பத்திரி மீனவர்கள் தேடிச்சென்று குறித்த சடலத்தை மீட்டதுடன் பேசாலை பொலிசாருக்கு தகவல் வழங்கி குறித்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதையடுத்து மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











