வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட “மகாவித்தியன்ஸ் நாள் – 2026” நிகழ்வானது இன்று (01) சனிக்கிழமை பாடசாலை வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்தது.
பழைய மாணவர்கள் தங்களது பாடசாலைக் கால நினைவுகளை மீட்டுவதுடன், பாடசாலையின் அபிவிருத்திக்குத் தம்மாலான பங்களிப்பை வழங்கும் நோக்கிலும், “நூற்றாண்டில் கேட்போர் கூடம்” எனும் திட்டத்திற்கு ஆதரவு நல்கும் வகையிலும் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில், மரநடுகை, மங்கல விளக்கேற்றல், கொடியேற்றம் மற்றும் பாடசாலைக் கீதம் என்பன இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பழைய மாணவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும், க. ஹரிப்பிரசாத் அவர்களின் தலைமையுரையும் வரவேற்புரையும் இடம்பெற்றன.
தொடர்ந்து, பாடசாலை அதிபரின் சிறப்புரை இடம்பெற்றதுடன், பாடசாலைக்கு அளப்பரிய சேவையாற்றிய முன்னாள் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பெருந்திரளான பழைய மாணவர்கள் பங்கேற்ற விசேட நடைபயணம் இடம்பெற்றது.
இந்நடைபயணம் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகி, வவுனியா மணிக்கூட்டு கோபுரம், குருமன்காடு மற்றும் வவுனியா பஜார் வீதி ஊடாகச் சென்று மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது.
நடைபயணத்தின் நிறைவில் பழைய மாணவர்களுக்கிடையிலான விறுவிறுப்பான மென்பந்துச் சுற்றுப் போட்டியும், வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பெருந்திரளான பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்பிரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.











