உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரஷ்யாவின் மத்திய தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் ராணுவம் 456 டிரோன்கள் மூலம் மாபெரும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவத்திற்கான எரிபொருள் விநியோகத்தை முடக்கும் நோக்கில் டெனேகோ (TANECO) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடர்ஸ்டான் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான இந்த எண்ணெய் வளம் நிறைந்த பகுதியை உக்ரைன் கடுமையாகத் தாக்கியுள்ளது.
இந்தத் திடீர் டிரோன் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 13 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 75 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களில் தீவிர காயமடைந்த 21 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய நிலப்பரப்பில் அமைந்துள்ள மிக முக்கியமான தொழில் உள்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
நேற்று இரவு முதல் காலை வரை உக்ரைனால் ஏவப்பட்ட 456 டிரோன்களைத் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலம் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், இதில் எத்தனை டிரோன்கள் இலக்குகளைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தின என்ற விவரங்களை ரஷ்யா வெளியிடவில்லை.
அதேவேளையில், உக்ரைனின் கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் பதிலடித் தாக்குதலாக ரஷ்யா நடத்திய 126 டிரோன் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், எல்லையைக் கடந்து இரு தரப்பும் நடத்தி வரும் சரமாரி டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் எல்லையோரப் பகுதிகள் பெரும் பதற்றத்திலும் அழிவிலும் மூழ்கியுள்ளன.











