கியூபெக் மாகாணத்தில் வருடாந்தக் கட்டுமானத் துறை விடுமுறைக் காலம் (Construction Holiday) தொடங்கியுள்ள நிலையில், வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாகாண நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற மூன்று வேறுபட்ட விபத்துக்களில் 6 பேரும், உள்ளூர் வீதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவருமாக மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கியூபெக்கின் லோரென்டியன்ஸில் (Laurentians) உள்ள லான்டியர் (Lantier) பகுதியில் இடம்பெற்ற இரு வாகனங்களின் நேருக்கு நேர் மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 வயதான தம்பதியும், அவர்களது 10 வயதுக்குட்பட்ட குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர்ந்து, ததுசாக் (Tadoussac) பகுதிக்கு அருகே நார்த் ஷோர் (North Shore) நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மற்றொரு நேருக்கு நேர் மோதலில் 20 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். கியூபெக் நகருக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் மற்றும் ஷெர்புரூக் (Sherbrooke) ஆகிய உள்ளூர் மாநகரப் பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி விபத்துக்களில், வீதியைக் கடக்க முயன்ற 50 வயதுடைய பாதசாரி ஒருவரும், காரைக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த 68 வயதுடைய சாரதி ஒருவரும் உயிரிழந்தனர்.
இத்தொடர் விபத்துக்களைத் தொடர்ந்து, வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மிகுந்த பொறுமையுடனும் அவதானத்துடனும்
செயற்பட வேண்டும் என கியூபெக் மாகாணப் பொலிஸார் (SQ) தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடைசி இரு வாரங்களில் கியூபெக்கில் சுமார் 20,0000 கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் விடுமுறையில் செல்வது வழக்கமாகும்.
இவர்களுடன் பொதுமக்களும் பெருமளவில் பயணங்களை மேற்கொள்வதால், வீதிகளில் வாகன நெரிசல் அதிகரித்து, ஆண்டின் மிகவும் ஆபத்தான விபத்துக்காலம் இக்காலப்பகுதியில் உருவாகுவதாக, கியூபெக் மோட்டார் வாகனக் காப்புறுதிச் சபை (SAQ) சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் இந்த விடுமுறைக் காலத்தில் இடம்பெற்ற 30 விபத்துக்களில் 38 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











