கியூபெக் மாகாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கியுள்ளனர்.
கோடைகால விடுமுறைக்குப் பின்னர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான CAQ மற்றும் முதன்மை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பரஸ்பரம் காரசாரமான குற்றச்சாட்டுகளையும் அரசியல் உத்திகளையும் முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கியூபெக் மாகாணத்தின் பொருளாதார சவால்கள், வாழ்வாதாரச் செலவுகள், சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மொழி உரிமைகள் ஆகியவை இத்தேர்தல் பிரசாரத்தின் மையப் பொருள்களாக உருவெடுத்துள்ளன.
கியூபெக்கின் முன்னாள் முதலமைச்சர் பிரான்சுவா லெகோவின் (François Legault) விலகலைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கிறிஸ்டின் பிரேஷெட் (Christine Fréchette) தலைமையிலான ஆளும்கட்சி, பழைய நிர்வாகத்தின் குறைகளிலிருந்து விடுபட்டு மக்களுக்கான உடனடித் தேவைகளில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறி வாக்குகளைச் சேகரித்து வருகிறது.
அதேவேளையில், எதிர்க்கட்சிகள் அரசின் பலவீனமான பொருளாதாரக் கொள்கைகளையும், பொதுத்துறைச் சேவைகளில் நிலவும் குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
சார்ள்ஸ் மிலியார்ட் (Charles Milliard) தலைமையில் இயங்கும் லிபரல் கட்சி, பொருளாதார வளர்ச்சிக்கான நான்கு முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்துள்ளதுடன், ஆங்கில மொழி பேசும் சமூகத்தினரின் ஆதரவை மீண்டும் வென்றெடுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon), கியூபெக்கின் இறையாண்மை மற்றும் தன்னாட்சி உரிமை குறித்த விவாதங்களை முதன்மைப்படுத்தி பிரசாரம் செய்து வருகிறார்.
கியூபெக் சொலிடேர் (Québec solidaire) கட்சியின் இணைப் பேச்சாளர் ரூபா கஸால் (Ruba Ghazal), சமூக நீதி, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான திட்டங்களை மையமாகக் கொண்டு ஆதரவு திரட்டுகின்றமை அவதானிப்புக்கு உள்ளாகியுள்ளது.
கியூபெக் தேசிய சட்டமன்றம் (National Assembly) கோடைகால விடுமுறைக்காக ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளும் ஓகஸ்ட் மாத இறுதியில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கவுள்ள 5 வார காலப் பிரசாரத்திற்குத் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











