மொன்றியல் நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி மெலினா ஃபிராட்டோலின் (Melina Frattolin) அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், அவர் காணாமல்போனதாகப் புகாரளிக்கப்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பே அவரது கைத்தொலைபேசி முழுமையாகச் செயலற்ற நிலைக்குச் சென்றுவிட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
சிறுமியைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது தந்தையான 46 வயது லூசியானோ ஃபிராட்டோலின் (Luciano Frattolin) மீதான இரண்டாம் நிலைக்கொலை மற்றும் உடலை மறைத்தமை தொடர்பான வழக்கு விசாரணை, நியூயோர்க்கின் எசெக்ஸ் கவுண்டி நீதிமன்றத்தில் (Essex County Court) நடைபெற்று வருகின்றது.
நியூயோர்க் மாநிலப் பொலிஸாரின் மின்னணுச் சாதன பகுப்பாய்வாளர் டேவிட் ஹங்கர்ஃபோர்ட் (David Hungerford) நீதிமன்றத்தில் சாட்சியமளித்த போது, சிறுமி மெலினா தனது தந்தையுடன் நியூயோர்க் வந்திருந்த வாரம் முழுவதும் கைபேசியில் செயலிகளைத் தொடர்ந்து பயன்படுத்திவந்துள்ளதாகத் தெரிவித்தார்.
சிறுமி காணாமல்போனதாகக் கூறப்பட்ட நாளன்று பிற்பகல் 4:30 மணியளவில், அவர் தனது தாயார் காளி கலாணிஸுக்கு (Kali Galanis) ” Selfie” எனப்படும் சுயபட காணொளியை (Selfie video) அனுப்பியுள்ளார்.
அக்காணொளியில் அச்சிறுமி சிரித்தபடியும் தனது முடியைக் கோதியபடியும் காணப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் உணவகம் ஒன்றில் சிறுமி செலவிட்டதாகவும், பிற்பகல் 5:30 மணியளவில் அவரது கைபேசி கடைசியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தரவுகள் காட்டுகின்றன.
எனினும், அன்றைய தினம் இரவு 10:00 மணியளவிலேயே வெள்ள நிற வேனில் வந்த இருவர் தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாக லூசியானோ பொலிஸில் புகாரளித்துள்ளார்.
அன்றைய தினம் இரவு 9:00 மணியளவில் சிறுமியின் தாயார் “என்னை அழை” (“Appelle moi”) எனப் பல குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், அதிகாலை 3:00 மணி வரை தொடர்ச்சியாகத் தொடர்புகொள்ள முயன்றமையும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.
குறித்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின், டைக்காண்டிரோகா (Ticonderoga) பகுதியில் உள்ள சதுப்புநிலக் குளமொன்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











