துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் குறிவைத்துத் தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த அல்லது படுகொலை செய்ய ஈரான் ஆதரவுப் படைகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தீவிர எச்சரிக்கை விடுத்தது.
இந்தச் சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத்துறை (சீக்ரெட் சர்வீஸ்) மற்றும் ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி தாம் ரகசியமாக வேறு விமானத்திற்கு மாறியதை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, அதிபர் டிரம்ப் அனைவரும் பார்க்கும் வகையில் கேமராக்களுக்கு முன்னால் வழக்கமான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் ஏறினார். ஆனால் விமானத்திற்குள் சென்றதும், அதன் மறுபக்கக் கதவு வழியாக உணவுப்பொருட்களை ஏற்றும் ‘கேட்டரிங் டிரக்’ மூலம் ரகசியமாக இறக்கப்பட்டு, அருகில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ‘C-32A’ என்ற சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டார்.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்தச் சிறிய விமானத்தில் தனியாக ஏறி பயணம் இயல்பானது போலக் காட்ட முயன்ற வேளையில், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட், வெள்ளை மாளிகை பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவரும் டிரம்ப் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில்தான் பயணிக்கிறார் என்று நம்பவைக்கப்பட்டனர்.
டிரம்ப் பயணித்த C-32A விமானம் “Reach 18” என்ற மாற்று அழைப்புக் குறியீட்டுடன் பறந்து பிரிட்டனை சென்றடைந்தது. அங்கிருந்து மீண்டும் பழைய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்திற்கு மாறி கேமராக்களுக்குக் காட்சியளித்த டிரம்ப், பின்னர் கத்தார் அரசு பரிசளித்த அதிநவீன போயிங் 747-8 விமானத்தின் மூலம் அமெரிக்கா திரும்பினார்.
அதேவேளையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து முன்னறிவிப்பு ஏதுமின்றி, செய்தியாளர்களையும் அதிகாரிகளையும் போலி விமானத்தில் பயணிக்க வைத்து ஆபத்தில் தள்ளியது குறித்து அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.











