தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கண்ணாடி இழை படகுகளில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 09 மணிக்கு குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நயினாதீவு கடற்தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்திய இழுவை மடி படகுகளில் தொடர்ச்சியாக , மனிதாபிமானமற்ற முறையில் எல்லை தாண்டி கடல் வளக் கொள்ளையில் ஈடுபடுவதுடன், தீவக மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்படுகின்றன.
அதனால் வடக்கு மீனவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய இழுவை படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
வடக்கு மீனவ சங்க பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் சமாச பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் இணையம் வடமாகாண பிரதிநிதிகள், ஏனைய கடற்றொழிலாளர் நலன் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட ரீதியில் மீனவர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் எமது போராட்டத்துக்கு வலுசேர்க்க வியாழக்கிழமை குறிகட்டுவான் பகுதியில் ஒன்று சேர வேண்டும் என நயினாதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரியுள்ளனர்.











