கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கண்ணூர் மாவட்டம் காரியங்கோடு ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 61 வயது முதியவர் பென்னியைக் காப்பாற்ற நீச்சல் வீரரான ராஜேஷ் (36) தனது குழுவினருடன் துணிச்சலாகக் களமிறங்கினார். சீறிப்பாய்ந்த வெள்ள நீரிலும் சற்றும் அஞ்சாமல் நீந்திச் சென்று முதியவரை அடைந்த ராஜேஷ், தன்னிடம் இருந்த உயிர்பாதுகாப்பு ஜாக்கெட்டை (Life Jacket) அந்த முதியவருக்கு அணிவித்து அவரைப் பத்திரமாகக் கரையேற்றினார்.
முதியவரைக் கரையேற்றிய பின்னர், ஆற்றைக் கடக்கப் பயன்படுத்திய கயிற்றின் பிடி நழுவியதால், கடுமையான நீரோட்டத்தில் ராஜேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தீயணைப்புத் துறை, மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தொடர்ந்து 3 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், புலிங்கோம் பாலத்தின் அருகே அவரது உடல் மீட்கப்பட்டது.
திருவனந்தபுரம் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஒரு சிறந்த நீச்சல் மற்றும் ராப்பெல்லிங் பயிற்றுவிப்பாளராவார். இதற்கு முன்பும் 2018 கேரள பெருவெள்ளம் மற்றும் 2024 வயநாடு நிலச்சரிவு பேரிடர் காலங்களில் தன்னார்வலராகக் களமிறங்கிப் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். தன்னுயிரைக் கொடுத்து மற்றொரு உயிரைக் காப்பாற்றிய ராஜேஷின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த ராஜேஷிற்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.











