கியூபெக் மாகாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுகாதார சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவரான கிறிஸ்டியன் ஜெர்மைன் தனது பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி அன்று இவரது பதவிக்காலம் உத்தியோகபூர்வமாக நிறைவுக்கு வரவுள்ளதுடன், அதுவரை புதிய தலைவருக்கான சுமூகமான அதிகாரப் பகிர்வு மாற்றங்களை அவர் முன்னெடுக்கவுள்ளார்.
‘சாந்தே கியூபெக்’ நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதில் தனக்கு முழுமையான அர்ப்பணிப்பு இருந்தது எனக்கூறிய கிறிஸ்டியன் ஜெர்மைன் “தற்போது சாந்தே கியூபெக் வலுவான அடித்தளத்தையும், திறமையான குழுவையும் பெற்றுள்ளதால், அடுத்த தலைமுறையினரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க இதுவே சரியான தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டியன் ஜெர்மைனின் இந்த திடீர் விலகல் முடிவை அடுத்து, சாந்தே கியூபெக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜெனிவிவ் பைரன் (Geneviève Biron) மற்றும் கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) ஆகியோர் அவருக்குப் பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மாகாண சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் ”எந்தவொரு புதிய அமைப்பின் தொடக்கமும் மிகவும்
சவாலானது எனவும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஜெர்மைன் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை எனவும் கூறியதுடன் கியூபெக் மாகாணம் ஜெர்மைனுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் கியூபெக் அரசாங்கம் கொண்டுவந்த ‘பில் 15’ (Bill 15) என்ற சுகாதார சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், ‘சாந்தே கியூபெக்’ என்ற இந்த உயர் கண்காணிப்பு நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபேயினால், கிறிஸ்டியன் ஜெர்மைன் உட்பட 15 உறுப்பினர்கள் இந்த சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











