கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ‘கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026’ மீதான விவாதம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா, தென்னிந்திய மக்களின் பல தசாப்த கால போராட்டத்திற்கு மதிப்பளித்து இந்த மசோதாவைக் கொண்டுவந்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மேற்கு வங்க மாநிலத்தின் பெயரையும் ‘பச்சிம் பங்கா’ என மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். 1947-ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று நாட்டின் பிரிவினையின் போது, டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் தலைமையின்கீழ் வங்காள இந்துக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே மேற்கு வங்காளம் உருவாக்கப்பட்டது என்றும், இந்த வரலாற்றுச் சூழலுடன் மாநிலத்தின் பெயர் நெருங்கிய தொடர்புடையது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் தங்களுக்கு இருந்த பெரும்பான்மையைப் பயன்படுத்தி மாநிலத்தின் பெயரை வெறும் ‘வங்காளம்’ என மாற்ற முயன்றதை விமர்சித்த அவர், அவ்வாறு மாற்றுவது தனி மாநிலத்திற்காகப் போராடிய தியாகிகளை அவமதிக்கும் செயலாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், வந்தே மாதரம் பாடலையும் ஆனந்தமடம் நாவலையும் வெறுப்பு நிறைந்தவை எனச் சில வரலாற்றுத் தலைவர்கள் சித்தரித்ததைச் சுட்டிக்காட்டிய பட்டாச்சார்யா, மாநிலத்தின் பண்பாட்டு பாரம்பரியத்தையும் வரலாற்று அடையாளத்தையும் தக்கவைக்க ‘பச்சிம் பங்கா’ என்ற பெயரே பொருத்தமானது எனத் தெரிவித்தார்.











