ஒட்டாவாவில் உள்ள கார்ல்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கனடாவின் பல்கலைக்கழக வளாகங்களில் யூத மாணவர்கள் யூத விரோத சம்பவங்களை எதிர்கொள்வதாக புதிய அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
Campus Antisemitism and Student Experiences – CASE எனப்படும் இந்த அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 900 யூத மாணவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன.
அதில், கடந்த 12 மாதங்களில் 96 சதவீத யூத மாணவர்கள் யூத விரோத சம்பவங்களை நேரடியாக அனுபவித்ததாக அல்லது அவற்றைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவான சம்பவங்களில் 18 சதவீதம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அல்லது கல்விப் பணியாளர்களுடன் தொடர்புடையவை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
70 சதவீத மாணவர்கள் தங்களது பல்கலைக்கழகம் யூத விரோதத்தை போதுமான அளவு தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை எனவும், 68 சதவீதம் பேர் தங்களது வளாகம் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இடமாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, 72 சதவீத மாணவர்கள் தாங்கள் யூதர்கள் என்பதை வகுப்பறையில் வெளிப்படையாக பேசுவதைக் கட்டுப்படுத்துவதாகவும், 57 சதவீதம் பேர் பாதுகாப்பு காரணங்களால் கிப்பா அல்லது டேவிட் நட்சத்திரம் போன்ற யூத அடையாளச் சின்னங்களை அணிவதைத் தவிர்ப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
கார்ல்டன் பல்கலைக்கழகம் அனைத்து வகையான இனவெறி மற்றும் பாகுபாடுகளையும் கண்டிப்பதாகவும், யூத விரோதம் உட்பட எந்தவிதமான பாகுபாடு, துன்புறுத்தல் அல்லது வன்முறையையும் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனடா முழுவதும் உள்ள யூத அமைப்புகள், பல்கலைக்கழகங்களிலும் அரசாங்க மட்டத்திலும் யூத விரோதத்தை எதிர்கொள்ள உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.











